
வடமதுரை,
வடமதுரை அருகே நான்கு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு அரசு பேருந்தை சிறைப்பிடித்தவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள பாடியூரில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஊராட்சி அலுவலகத்தின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் குறைந்தழுத்த மின்சாரம் பழுதானதால், மின்மோட்டாரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
மேலும், குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பாடியூர் கிராமத்திற்கு வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
எனினும், குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் சிரமப்பட்டனர். இதனால் அதே பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குச் சென்று ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர்.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் சினம் கொண்ட கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று பாடியூர் ஊராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் நடத்தினர்.
அப்போது அந்த வழியாக புதுப்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை சிறைப்பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வடமதுரை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், வடமதுரை காவல் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இன்னும் ஒரு வாரத்திற்குள் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.