அரியலூர்
வாங்கிய கடனை திருப்பி கேட்டபோது போலி காசோலை (செக்) கொடுத்து மோசடி செய்த வழக்கில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி) நிறுவன முதன்மை மேலாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து செயங்கொண்டம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் அருகே உள்ளது கரடிக்குளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தருமலிங்கம் மகன் பாலகிருஷ்ணன் (50). இவரிடம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன முதல் சுரங்க முதன்மை மேலாளராகப் பணிபுரியும் ம.சிவசுப்பிரமணியன் (50) ரூ. 4 இலட்சம் கடனாக பெற்றுள்ளார்.
கடனைத் திருப்பி கேட்ட பாலகிருஷ்ணனுக்கு, சிவசுப்பிரமணியன் கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு காசோலை ஒன்றை கொடுத்துள்ளார்.
ஆனால், அவரது வங்கியில் பணமில்லை. பணம் இல்லாத வங்கிக் கணக்கின் காசோலயை கொடுத்து ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் செயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, சிவசுப்பிரமணியனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, ரூ. 4 இலட்சத்தை மூன்று மாதத்திற்குள் பாலகிருஷ்ணனிடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவுப் பிறப்பித்தார்.