வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வுப் பகுதி… தமிழகத்தில் கொட்டப்போகிறது அதிகனமழை!!

By Narendran SFirst Published Nov 10, 2021, 9:59 AM IST
Highlights

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த  தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை தமிழக கடலோரப் பகுதியை நெருங்கும் என்றும் இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும் அதனால் இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாகை, காரைக்கால் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதலே கனமழை பெய்தது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இந்த வருட மழையின் தொடக்கத்தில் உருவான முதல்  காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக பெரு மழையுடன் சென்னையை வெள்ளக்காடாக்கி இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையை விட கூடுதலாக மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகள் மழை நீரில் மிதக்கிறது. இதற்கிடையேதான்,  இரண்டாவதாக தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என்பதால் மழை மட்டுமே 20 செமீ முதல் 25 செமீ வரை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி கடலோரப் பகுதியில் நிலை கொண்டதால், புதுச்சேரியில் தொடங்கி கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டதால், இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு இருந்தது. பல இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. விளை நிலங்களை பொருத்தவரையில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த  தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது, அதனால் இன்று, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும்  பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இது தவிர திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும். அதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். மேலும், நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கடலூர், வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

click me!