
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதி நம்ம ஊரு திருவிழா எனும் தலைப்பில் கிராமியக் கலைஞர்களைக் கொண்டு கலை விழா நடத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலை பண்பாட்டுத்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கிராமியக் கலைஞர்களைக் கொண்டு சென்னையில் பிரம்மாண்டமான கலைவிழா நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று 2021-2022 ஆம் ஆண்டு துறை மானியக் கோரிக்கை எண்.29ல் தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி, தமிழகத்தினைச் சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில், திரளான கலைஞர்கள் பங்கு பெறும் பிரம்மாண்ட கலைவிழா, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் சென்னையில் மூன்று நாட்கள் நடத்தப்படும். இதற்கென தொடரும் செலவினமாக கலை பண்பாட்டுத்துறையின் ஆண்டு வரவு செலவு ஒதுக்கீட்டிலிருந்து ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேற்காண் சட்ட மன்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, அரசாணை எண்.166, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, நாள்.18.11.2021 வாயிலாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி தமிழகத்தினைச் சார்ந்த பாரம்பரியக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலைவிழா, ஆண்டு தோறும் சென்னையில் 6 இடங்களில் 3 நாட்கள் நடத்துவதற்கு ரூ.91,00,000/- தொடரும் செலவினமாக அரசு அனுமதித்து ஆணை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசாணையினை செயல்படுத்தும் வகையில் நம்ம ஊரு திருவிழா எனும் தலைப்பில் தமிழகத்தின் பாரம்பரியமான கிராமியக் கலைகளை வெளிப்படுத்தும் 500க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு, சென்னையில் 7 இடங்களில் ஜன.14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் கலை விழா நடைபெறவுள்ளது. அதுமட்டுமல்லாமல் 7 வெளி மாநில கிராமியக் கலைக்குழுவினர் இவ்விழாவில் பங்குகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம்ம ஊரு திருவிழாவை சீரும், சிறப்புமாக நடத்வது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரசு உயர் அலுவலர்கள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் சென்னையில் நடத்தப்படுவதைப் போன்றே இவ்விழாவினை மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும், அரசு உயர் அலுவலர்களாலும், கலைஞர்களாலும் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை விரைந்து எடுத்திட அறிவுறுத்தப்பட்டது.