
புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்தார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். டி.வி.எஸ் கார்னரில் பணிமனை முன்பு கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தை 2.57 மடங்கு உயர்த்த வேண்டும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 6வது நாளாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியாக இருக்கின்றன. 6வது நாளாக இன்றும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பிவிட்டால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது என்றும் பணிக்கு திரும்பவில்லை எனில், அவர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று தங்கள் குடும்பத்துடன் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்தார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். டி.வி.எஸ் கார்னரில் பணிமனை முன்பு கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.