பெட்ரோல் பங்க் அலுவலகத்துக்குள் புகுந்து பணம் கொள்ளை; நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை...

First Published Mar 8, 2018, 8:19 AM IST
Highlights
Money robbed in petrol punk office at midnight by Mystery people


திருப்பூர்

திருப்பூரில் நள்ளிரவில் பெட்ரோல் பங்க் அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.51 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றுவிட்டனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம், செஞ்சேரிமலையைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (41). இவர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையத்தில் உள்ள பொள்ளாச்சி சாலையில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். 

இந்த பங்கில் நேற்று முன்தினம் இரவு செஞ்சேரிமலை அருகே உள்ள வடவேலம்பட்டியை சேர்ந்த மந்திராசலம் (25), அங்கமுத்து (24), சந்திரன் (21), அருண் (21) ஆகியோர் பணியில் இருந்தனர். 

நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு ஒரு வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஊழியர்கள் நால்வரும், அங்குள்ள அலுவலக அறைக்குச் சென்று படுத்து தூங்கிவிட்டனர். 

இந்த நிலையில் நள்ளிரவு ஒன்றரை மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பும் இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்ட்டு அங்கு ஊழியர்கள் யாரும் இல்லாததால், அலுவலக அறையை நோக்கி இருவரும் சென்றனர்.

அங்கு ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்த மர்ம நபர்களில் ஒருவன் அலுவலக அறைக்குள் புகுந்து, மேஜையில் இருந்த பணப்பையை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான். அந்த பையில் ரூ.51 ஆயிரம் இருந்தது. 

அதற்குள் சத்தம்கேட்டு தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் கண்விழித்தபோது, மர்ம நபர்கள் அலுவலக அறைக்குள் இருந்து ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே பதறி அடித்து எழுந்த மற்ற ஊழியர்கள், வெளியே ஓடிவந்தபோது, அங்கிருந்து மர்ம நபர்கள் இருவரும் தப்பி ஓடினார்கள். ஊழியர்கள் துரத்திச்சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை. அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை மட்டும் அங்கேயே விட்டுச்சென்றுவிட்டனர். 

இதனைத் தொடர்ந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பல்லடம் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு பல்லடம் காவல் ஆய்வாளர் முத்துசாமி தலைமையிலான காவலாளர்கள் விரைந்து வந்தனர். அத்துடன், மாவட்டம் முழுவதும் காவலாளர்கள் உஷார்படுத்தப்பட்டனர். 

விடிய, விடிய தேடுதல் வேட்டை நடத்தியும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவலாளர்கள் கைப்பற்றி விசாரணையை தொடங்கி உள்ளனர். 

மேலும், மர்ம நபர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை காவலாளர்கள் பறிமுதல் செய்து, அது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க காவல் ஆய்வாளார் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!