
பிரதமர் நரேந்திர மோடி தமிழக விவசாயிகளை தீண்டத்தகாதவர் போல் பார்க்கிறார் எனவும், அதனால் தான் அவர் விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார் எனவும் தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிநீர்களை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
40 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அரை நிர்வாண போராட்டம், எலி தின்னும் போராட்டம், சாட்டியடி போராட்டம், அரை மொட்டை அடிக்கும் போராட்டம் என தினமும் ஒவ்வொரு விதமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.
ஆனால் மத்திய அரசு இதுவரை விவசாயிகளின் கருத்தை கேட்க முன்வர வில்லை.
இதனிடையே தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தேர்வுக்கும் வகையில் வரும் 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள முக ஸ்டாலின் அய்யாகண்ணுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு கூறியதாவது :
முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள எங்களுக்கு விருப்பம் தான்.
ஆனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும்.
இன்று மாலையே முடிவு அறிவிக்கப் படும்.
பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை தீண்டத்தகாதவர் போல் பார்கிறார். அதனால் தான் அவர் எங்களை அவர் விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.