
கிருஷ்ணகிரி,
சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடந்தது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் வசந்தா வரவேற்றார். வக்கீல் சாதிக், ஐ.இ.எல்.சி. திருச்சபை செயலர் ஸ்டாவின், சுன்னத் சமாஜ் தலைவர் சாப்ஜான், கைட் அறக்கட்டளை செயலர் அப்துல் உன்னப், தர்கா கமிட்டி செயலர், சையத் நசீர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் கதிரவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர், பேசியதாவது:–
“சிறுபான்மையின மக்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு வகையான தொழில் பயிற்சிகளையும், கடனுதவிகளையும் வழங்கி வருகிறது.
கல்வி உதவித்தொகை, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை, பள்ளி மேற்படிப்பு உதவித் தொகை, உருது மொழி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவில் பரிசுகள் என பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த கையேட்டை அனைவரும் பெற்று பயனடைய வேண்டும்.
மேலும், சிறுபான்மையினர் அமைப்பின் சார்பாக தவுலாதாபாத் அருகில் உள்ள உருது பள்ளி கட்டிடம் சீரமைக்கவும், கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கவும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அப்பள்ளிக்கு அனைவருக்கும் கல்வி திட்ட நிதியின் கீழ் புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12–ஆம் வகுப்பு மற்றும் 10–ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத்தொகையாக 13 மாணவ, மாணவிகளுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் காசோலைகளையும், ஒரு நபருக்கு ரூ.3 ஆயிரத்து 465 மதிப்பிலான தையல் எந்திரத்தையும், கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி சார்பாக தனி நபர் கடனுதவியாக 9 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ. 90 ஆயிரம் மதிப்பில் தனி நபர் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதை பெற்று பயனடைய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாந்தி, கிருஷ்ணகிரி உதவி ஆட்சியர் முகமது அஸ்லாம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், துணை பதிவாளர்கள் ரவிசந்திரன், பாலமுருகன், மாவட்ட கல்வி அலுவலர் அகமது பாஷா, ஐ.இ.எல்.சி. திருச்சபை பங்கு தந்தை செயின்ட் பால் லுர்தன், ஜாமிய மசூதி தலைவர் அமீர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.