செய்தியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அமைச்சரின் ஆதரவாளர் கைது....

First Published May 20, 2017, 3:02 PM IST
Highlights
minister udayakumar supporter arrest due to attack on reporter


மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட  திருமங்கலம்  பகுதியில் தனியார்  தொலைக்காட்சி ஒன்றின்  செய்தியாளராக பணியாற்றி வரும்  நீதிராஜன் என்பவரை தாக்கி  கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அமைச்சர்  ஆர்.பி. உதயகுமாரின் ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட  திருமங்கலம்  பகுதியில்  செய்தியாளராக நீதிராஜன் என்பவர்  பணியாற்றி  வருகிறார்.
அவரது  மகன் சாய்ஸ்ரீ (வயது 1.1/2 ) எனும் சிறுவன்  சிறுநீரகக் கோளாறு  காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்  அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். 

இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்வதற்குரிய கட்டுத்துணி உள்ளிட்ட மருந்துகளை நீதிராஜன் வாங்கிக் கொடுத்த பின்னர் அந்த சிறுவனுக்கு நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர் அவன் தங்கியிருந்த அறைக்கு மாற்றப்பட்டான். 

இந்த சூழலில் சிறுவன் சாய்ஸ்ரீ  காற்றோட்டம் இல்லாததால் மிகவும்  அவதிக்குள்ளானான். இந்த தகவலறிந்த  அவனது  தந்தை  நீதிராஜன் மருத்துவமனையில் பணியிலிருந்த செவிலியர்கள் பசும்பொன் மற்றும் அவரது உடன் பிறந்த அக்கா சங்கரி  ஆகியோரிடம் உள் நோயாளிகள் அறையில் மாட்டப்பட்டு இருந்த  மின்விசிறி  எங்கே?  என்றும்  நோயாளிக்கு மிகவும் முக்கியமான காற்றோட்ட வசதிகூட   அறையில் இல்லையெனில்  அவர்கள் எப்படி  தங்குவார்கள் என கேள்வி எழுப்பியதாக  கூறப்படுகிறது.

மேலும்  நீதிராஜன்  வீட்டிலிருந்து மின்விசிறி ஒன்றை எடுத்து வந்து அவரது மகன் தங்கியிருந்த அறையில் வைத்து  அதனை பயன்படுத்திக் கொள்ள  அவர்களிடம் அனுமதி கேட்டதாகத் தெரிகிறது.  அதற்கு  செவிலியர்கள்  இருவரும்  நீதிராஜனை  கேவலமாக திட்டியதாக சொல்லப்படுகிறது.  

இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள்  இல்லாத நிலையை  மதுரை மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் பார்வைக்கு கொண்டு சென்று மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவங்களை அவரிடம் நீதிராஜன் கூறி முறையிட்டதாக தெரிகிறது. 

இந்த விவகாரத்தினை மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் உடனடியாக ஆட்சியரின் கவனத்திற்கு  கொண்டு சென்றதால் அவர் அந்த மருத்துவமனை அதிகாரிகளை  தொலைபேசியில்  அழைத்து  நடவடிக்கை எடுக்க  ஆட்சியர்  உதவியாளருக்கு உத்தரவிட்டாராம்.

இதனால் இந்த விவகாரம் பெரிதாகி தனது வேலைக்கு  பிரச்னை  வந்து விடும்  என்ற  நோக்கில்  செவிலியர்கள் பசும்பொன் மற்றும் அவரது அக்கா சங்கரி  ஆகியோர் சங்கரியின் கணவர்  சிங்கராஜாவிடம் மருத்துவமனையில்  நடைபெற்ற மேற்படி விவரத்தினைக் கூறி  புலம்பியதாக தெரிகிறது.   

இந்த நிலையில்  அதிமுக முக்கிய பிரமுகரும் தமிழக அமைச்சர்  ஆர்.பி. உதயகுமாரின் ஆதரவாளரும் , அவசர சிகிச்சை ஊர்தி நிறுவனம் நடத்தி வருபவருமான சிங்கராஜா  அடியாட்களுடன்  உடனடியாக மருத்துவமனையின் உள்நோயாளிகள் அறைக்கு   வந்தாராம்.

அப்போது   செய்தியாளர்  நீதிராஜன்   மருத்துவமனையில் அடிப்படை வசதிகள்  இல்லாத  நிலையை செய்தியாக வெளியிடுவதற்காக காணொளி பதிவு செய்துகொண்டு இருந்தாராம்.

இதனால்  நீதிராஜன்மீது ஆத்திரம் அடைந்த  செவிலியர் சங்கரியின் கணவர்  சிங்கராஜா அவரை அடித்து "பத்திரிகை தொழில் செய்பவன் எல்லாம் பொறம்போக்குதானடா" என்று கூறி கெட்ட வார்த்தைகளில் திட்டியதாக  தெரிகிறது.

மேலும் சிங்கராஜா மற்றும் அவருடன் இருந்த அடியாட்கள் நீதிராஜனின்  கேமராவை தட்டி  விட்டு சேதப்படுத்தி  "நான் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆள். என்னை ஒன்றும் செய்ய முடியாது. என் குடும்பத்தையே இந்த மருத்துவமனையில் பணியாற்ற வைத்துள்ளது அமைச்சர்தான். கலெக்டர்கூட ஒன்றும்  செய்ய முடியாது" என்று அவரையும் கெட்ட வார்த்தையில் திட்டி வசைபாடி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.   

மேலும் சிங்கராஜா மற்றும் அவருடன் இருந்த அடியாட்கள்  அராஜகமாக தன்னைத் தாக்கி  கொலை மிரட்டல் விடுத்ததாக  நீதிராஜன்  திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிங்கராஜா மற்றும்  அவரது ஆதரவாளர்களிடம் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை செய்து கைது செய்தனர்.

மேலும் நீதிராஜனை தகாத வார்த்தையில் திட்டி பிரச்சனைக்கு காரணமான செவிலியர்கள் பசும்பொன் மற்றும் சங்கரி ஆகியோர் மீது போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

click me!