சாதியற்ற சமூகம் படைக்க... தமிழில் அம்பேத்கர் எழுத்துக்கள்.. புதிய 17 தொகுதிகள் வெளியீடு!

Published : Aug 13, 2025, 10:14 PM IST
Babasaheb Ambedkar Writings in Tamil

சுருக்கம்

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பின் இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக வெளியிடப்பட்ட 10 தொகுதிகள் இரண்டு மாதங்களில் 2,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பின் இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இந்த தொகுதிகளை வெளியிட்டார்.

தமிழில் அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள்

சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க பாடுபட்டவர் அம்பேத்கர். அவரது படைப்புகள் இன்றைய இளைஞர்களுக்கு எளிதாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ் வளர்ச்சித் துறை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் கட்டமாக 10 தொகுதிகளை வெளியிட்டார். இந்த பத்து தொகுதிகளும் வெளியான இரண்டு மாதங்களுக்குள் 2,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இதன் மூலம் ₹14,00,000 அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கட்டத்தில் 17 தொகுப்புகள்

தற்போது, இரண்டாம் கட்டமாக மொழிபெயர்க்கப்பட்டு அணியம் செய்யப்பட்டுள்ள தொகுதிகளின் விவரம்:

தீண்டாமை - 2 தொகுதிகள்

காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாதோருக்குச் செய்தது என்ன – 4 தொகுதிகள்

இந்து மதம், மார்க்சியம், மத மாற்றம் – 4 தொகுதிகள்

புத்தர் – அவரது தம்மம் – 3 தொகுதிகள்

பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை – 4 தொகுதிகள்

இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந. அருள், நெறியாளுகை உறுப்பினர்கள் பேராசிரியர் வீ. அரசு, அ. மதிவாணன் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த சோ. சண்முகநாதன், ஆ. சிவக்குமார், மா. சிவக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த முயற்சி, அம்பேத்கரின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பரவ உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்
இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்