
சென்னை எழும்பூரில் உள்ள மண்டல கண் மருத்துவமனையில், 'விழித்திரை காப்போம்' என்ற முன்னோடித் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சி. அருண்ராஜ் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 30 வயதிற்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், புதிதாக தொடங்கப்படவுள்ள செவிலியர் கல்லூரிகள், கூடுதல் மருத்துவ இடங்களுக்கான அரசாணைகள் மற்றும் மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் விரிவாக விளக்கமளித்தார்.