
I Periyasamy hospitalized in Coimbatore : தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி, பல முறை திமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எளிமையான வாழ்க்கை முறையும், கட்சி மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பும் காரணமாக, அவர் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் அடையாளமாகவும் ஐ.பெரியசாமி திகழ்ந்து வருகிறார்.
தற்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பொறுப்பு வகித்து வருகிறார். வருமானதிற்கு அதிகான சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு விசாரணையில் உள்ளது. இதனிடையே கடந்த மாதம் இவரது வீடு, அலுவலகம் மற்றும் இவரின் மகன் வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐ.பெரியசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மருத்துவர்கள் ஆரம்ப சிகிச்சை அளித்த பிறகு, பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவர் நிலையான உடல்நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவர்கள் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சர். ஐ பெரியசாமி உடல் நிலை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.