
நாமக்கல்
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், துணைத்தலைவர் வேலாயுதம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தவில்லை, எனவே கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்,
25.10.2017 அன்று மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே தர நிர்ணயம் செய்யப்பட வேண்டும்,
கொள்முதல் செய்யவரும் வாகனங்களில் இந்த கருவிகளை கொண்டு வர வேண்டும்,
6 மாதத்திற்குள் இதனை அமல்படுத்த உத்தரவிட்டும், இதுவரை அமல்படுத்தவில்லை. உடனடியாக இதை அமல்படுத்த வேண்டும்,
கால்நடை தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்" உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.