
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,873 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டது.
கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகரில் இருந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 750 கனஅடியாக இருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. நேற்று முன்தினம் காலை நிலவரப்பட்டி வினாடிக்கு 4,100 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6,873 கனஅடியாக உயர்ந்தது.
டெல்டா மாவட்ட சாகுபடிக்காக 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 69.70 அடியாக உள்ளது. நீர் இருப்பு 32.44 டிஎம்சி.
இதற்கிடையில்,ஒகேனக்கல் காவிரியில் நேற்று நீர்வரத்து 11,400 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, காவிரியில் பரிசல் பயணம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.
தொடர் விடுமுறையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள், பரிசல் சவாரி செய்ய முடியாததால் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.