
தமிழகத்தில் இன்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் தேர்வில் 32 ஆயிரத்து 674 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியது. இன்று தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதில், 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் தேர்வு எழுதுவதாக கூறப்பட்டது. இதற்காக மொத்தம் 3 ஆயிரத்து 119 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டன.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத் தேர்வுகள் நடைபெறாத நிலையில், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை சந்திக்காத மாணவர்கள் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். இதனிடையே தேர்வு பயம் காரணமாக சேலத்தில் 2 மாணவர்கள், மதுரையில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வின் முதல் நாளான இன்று 32 ஆயிரத்து 674 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பொதுத் தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும்.
உடல்நிலை பாதிப்பு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகும். ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வின் முதல் நாளிலேயே 32 ஆயிரத்து 674 மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருந்துள்ள நிலையில், இனி வரும் தேர்வுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்குமா?, தேர்வு பயம் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லையா? என்பன போன்ற கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்று நடைபெற்ற தேர்வில் எந்த வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என தேர்வுத்துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.