ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமுக்கு மணி மண்டபம்… நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…

First Published Jul 26, 2017, 9:23 AM IST
Highlights
mani mandapam for abdul kalam in rameswaram


ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமுக்கு மணி மண்டபம்… நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…

ராமேஸ்வரத்தை அடுத்த பேய்க்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை நாளை  பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் குடியரசுத் தலைவர்,  அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது.

இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் 15  கோடி ரூபாய் செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை , இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு நாளை காலை 10 மணி அளவில் வருகிறார்.

அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு மண்டபம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைகிறார்.

அதன்பின் கார் மூலம் புறப்பட்டு காலை 11.20 மணிக்கு அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசிய கொடி ஏற்றுகிறார். பின்பு மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார்.

இதையடுத்து, காலை 11.55 மணிக்கு , ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்ச்ர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய-மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

 

click me!