
மதுரை,
விவசாய கடனை இரத்து செய்யக்கோரிய வழக்குக்காக மதுரை உயர் நீதிமன்றத்திற்கு வந்த விவசாய சங்க செயலாளர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் ஐயாகண்ணு. ஐந்து ஏக்கருக்குள் விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய கடனை மட்டுமே தமிழக அரசு இரத்து செய்துள்ளதாகவும், ஓரவஞ்சனை இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடனையும் இரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடக்கோரி ஐயாக்கண்ணு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை மதியம் நடக்க இருந்தது. விசாரணையை பார்ப்பதற்காக திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150–க்கும் மேற்பட்ட விவசாயிகள் மதுரை உயர் நீதிமன்றத்திற்கு வாகனங்களில் வந்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள இடையபட்டியை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட விவசாய சங்க செயலாளர் அகஸ்டின் (40) என்பவரும் வந்திருந்தார்.
அவர் நீதிமன்ற வளாகத்தில் விவசாயிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நீதிமன்றத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அகஸ்டின் மரணம் குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு கூறும்போது, “அகஸ்டினுக்கு 4 இலட்சம் ரூபாய் விவசாய கடன் உள்ளது. தமிழக அரசு ஐந்து ஏக்கருக்குள் விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே விவசாய கடனை இரத்து செய்துள்ளது.
அகஸ்டினுக்கு 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் இருப்பதால் அவரது பயிர்க்கடன் இரத்து செய்யப்படவில்லை. இதனால் அவர் கவலையில் இருந்து வந்தார். உயர்நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு சாதகமாக இருக்கும், இதன்மூலம் விவசாய கடன் இரத்தாகும் என்று கருதி தான் அவரும் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். இந்தநிலையில் தான் அவர் மாரடைப்பால் இறந்து விட்டார்“ என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்தநிலையில் ஐயாக்கண்ணு தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை மதியம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த வேண்டியதிருப்பதாக கூறிய நீதிபதிகள், விசாரணையை 25–ஆம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தனர்.