
சாராய வியாபாரம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர்,காமராஜர் நகர்,லாலா ஏரி, இந்திரா நகர் உள்ளிட்ட இடங்களில் கள்ள சாராயம் அதிகமாக விற்பனைசெய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து காவல்துறையில் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் அப்பகுதி மக்கள் இரண்டு கட்டமாக சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர் இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக போலீஸார் அப்பகுதிகளில் அதிரடியாக சாராய வேட்டை ஈடுபட்டனர்.
மக்கள் போராட்டம்:
அப்போது பாழடைந்த மற்றும் நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீடுகளிலிருந்து 70க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைக்கபட்டிருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலுன் இதுக்குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கள்ள சாராய கும்பலை சேர்ந்த 21 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் கள்ள சாராய விற்பனையை முழுவதும் ஒழிக்கவும், கள்ள சாராய கும்பலை சேர்ந்த கும்பலை பிடிக்க டி.எஸ்.பி சுரேஷ்பாண்டியன் தலைமையிலான 50 பேர் கொண்ட போலீஸார் மற்றும் ஆயுதபடை போலிசார் குழு நேதாஜி நகர்,லாலா ஏரி,இந்திரா நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று அதிரடியாக தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
தனிப்படை அமைப்பு:
மேலும் சாராய கடத்தல் வேட்டையில் முக்கிய குற்றவாளி மகேஷ்வரி அவருடைய கணவர் சீனிவாசன் உட்பட மேலும் 10 பேரை பிடிக்க வாணியம்பாடி டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கள்ள சாராய கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பிரபல பெண் சாராய வியாபாரி உட்பட 7 பேர் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து திருவண்ணாமலையில் வைத்து கைது செய்துள்ளனர்.
மகேஸ்வரி அதிரடி கைது:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் பல நாட்களாக 4 தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் சீனிவாசன் உட்பட 7 பேர் திருவண்ணாமலையில் கைது தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். சாராய வியாபாரி மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன், உஷா, தேவேந்திரன், சின்னராஜ், மோகன் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு பெண் உட்பட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சாராய கும்பல் :
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நேதாஜி நகர் பகுதியில் திருவிழா ஒன்றின்போது இளைஞர்கள் மீது சாராய கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் சாராய கும்பலை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாராய கும்பலின் முக்கிய குற்றவாளியான மகேஸ்வரியை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி சாராய பொட்டலங்களை சாலையில் கொட்டி போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினர். இதனால் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது.இந்த நிலையில் மகேஸ்வரிக்கு சொந்தமான கொட்டகைக்கு மர்மநபர் தீ வைத்தனர்.