"நன்னெறி- திருக்குறள்" கல்வியில் இல்லை; இப்படியே போனால் வினாத்தாள் குழுவை கலைப்போம்; உயர்நீதிமன்றம்

By Thanalakshmi VFirst Published Oct 18, 2022, 3:57 PM IST
Highlights

மாணவர்களுக்கு அறிவுரை கூறும் பெற்றோரையும், ஆசிரியரையும் தாக்கும் சூழல் தற்போது நிலவுகிறது. எனவே மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி மிக அவசியம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும் தற்போது நடைபெறும் பள்ளி தேர்வுகளிலுள்ள வினா தாள்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பயனற்றதாக உள்ளது. இதே நிலை நீடித்தால் தேர்வு வினாத்தாள் அமைக்கும்  குழுவினை கலைக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

மதுரையை சேர்ந்த ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில்,” 2016 உயர் நீதிமன்ற உத்தரவின்படி திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அடங்கிய 1050 திருக்குறள்களை 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 

ஆனால், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் திருக்குறள் பெயரளவில் மட்டுமே உள்ளது.மாணவர்கள் தேர்வு எழுதும் பொழுதும் திருக்குறள்கள் பெயரளவில் மட்டுமே இடம்பெறுகிறது. இதுக்குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் திருக்குறள் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அடங்கிய 108 அதிகாரங்களில் 1050 திருக்குறள்கள் பொருள் உடன் இடம் பெற உத்தரவிட வேண்டும். மேலும் தேர்விலும் திருக்குறள்கள் சம்பந்தமான கேள்விகள் இடம் பெற உத்தரவிட வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க:தூத்துக்குடி போராட்டக்காரர்களை வேட்டையாடிய காவலர் சுடலைக்கண்ணு..! 17 ரவுண்ட் சுட்டது ஏன்.? அறிக்கையில் தகவல்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,

* திருக்குறள் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தக் கூடியது. 

* 1000 திருக்குறளில் 5 திருக்குறள்களின் பொருளை மாணவர்கள் உணர்ந்தாலே அவர்களை நல்வழிப்படுத்த முடியும்.

* மாணவர்களுக்கு அறிவுரை கூறும் பெற்றோரையும், ஆசிரியரையும் தாக்கும் சூழ்நிலை உள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி மிக அவசியம். 

* திருக்குறளில் 108 அதிகாரங்களில் 1050 குறள்களை மாணவர்களுக்கு கட்டாயம் கற்பிக்க வேண்டும் என 2017-ல் அரசாணை உள்ளது அதனை ஏன் சரிவர பின்பற்றவில்லை.

* தற்போது நடைபெறும் பள்ளி தேர்வுகளிலுள்ள வினா தாள்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பயனற்றதாக உள்ளது.

* இதே நிலை நீடித்தால் தேர்வு வினாத்தாள் அமைக்கும்  குழுவினை கலைக்க நேரிடும்.

* திருக்குறள்கள் பாடத்திட்டத்தில் சரிவர நடைமுறைப் படுத்தாவிட்டால் பள்ளிக்கல்வித்துறை செயலர் ஒவ்வொரு விசாரணையிலும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்தனர். 

மேலும் இந்த வழக்கு குறித்து தமிழ் வளர்ச்சித் துறை செயலர், தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் படிக்க:தமிழ் மொழியை மீறி இந்தி திணிப்பை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் ..! ஸ்டாலின் தீர்மானத்திற்கு ஓபிஎஸ் ஆதரவு

 

click me!