நீதிபதிகள் நியமனத்தில் தற்போதைய நிலைமை குறித்து தலைமை செயலாளர் விளக்கம் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
பரமக்குடி மஞ்சூர் வழக்கறிஞர் சிலம்பராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இந்த ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட விபரங்களை டி.என்.பி.எஸ்.சி., செயலர் வெளியிட்டுஉள்ளதாகவும், அதில் மாவட்ட முன்சீப் உள்ளிட்ட சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு பற்றி குறிப்பிடவில்லை எனவும் தெரிவிக்கபட்டிருந்தது.
மேலும், கீழமை நீதிமன்றங்களில் 150 சிவில் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தேர்வு நடத்தக் கோரி தமிழக உள்துறை செயலர், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு மனு அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிடபட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு ஏற்கனவே தமிழக உள்துறை செயலர், டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு 'நோட்டீஸ்' அனுப்பி இன்றைக்கு வழக்கை ஒத்திவைத்தது.
அதன்படி இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் நியமன விதிகளில் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.
பரிந்துரைகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தலைமை செயலாளர் விளக்கம் தர ஆணை பிறப்பித்தது.