டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மதுரை மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, தூய்மையான குடியிருப்புக்கு முதல் பரிசாக 2 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 1.5 லட்சம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 1 லட்சம் ரூபாயும் வழங்கப்போவதாக மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு கொசுப்புழுக்களை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பள்ளிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், சினிமா தியேட்டர்கள், வீடுகள் என பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதனை மீறியும் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் அலட்சியமாக செயல்படுபவர்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு வெகு வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில்தான் டெங்கு பாதிப்பும், உயிரிழப்புகளும் உள்ளதாக கூறப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 650 காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகின்றனர்.
மதுரையில் குப்பைகளை அகற்றாமலும், தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு ஏதுவான நிலையிலும் உள்ள வீடுகளுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையும், வணிக வளாகங்களுக்கு 50 ஆயிரமும், மருத்துவமனைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுரையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சார்பில் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் கலந்து கொண்டு பேசினார். அப்போது,
குப்பைகறை தரம் பிரித்து வழங்குவதில் சிறப்பான பங்களிப்பு வழங்குவது, சுற்றுப்புறத்தில் கொசு உற்பத்தியாகாமல் தூய்மையைப் பராமரிக்கும் குடியிருப்போர் நலச்சங்கங்கள், முக்கிய தெருக்கள், முக்கிய பகுதியை சார்ந்தவர்களுக்கு முதல் வரிசாக ரூ.2 லட்சம், 2-வது வரிசாக ரூ.1.5 லட்சம், 3-வது பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று கூறினார்.
தற்போது அறிவிக்கப்பட்ட இந்த பரிசு தொகைகள், ஜனவரி மாதம் நடைபெறும், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.