தங்க குதிரையில் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்… மக்கள் கடலில் மதுரை…

First Published May 10, 2017, 6:54 AM IST
Highlights
Madurai Alagar in vaigai river


மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட  தங்கக் குதிரையில் பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் தரிசன்ம் செய்தனர்.

உலகப் புகழ் பெற்ற மதுரை  சித்திரைத் திருவிழா கடந்த 28-ந் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 26-ந் தேதி இதற்கான விழா தொடங்கியது.

சித்திரைத் திருவிழாவையொட்டி மேதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் கடந்த 5-ந் தேதி பட்டாபிஷேகமும், 6-ந்தேதி திக் விஜயமும் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்தது.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் தேரோட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, நேற்று தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா நிறைவு பெற்றது.

இந்த நிலையில் சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு அழகர்மலையில் இருந்து, தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மதுரை நோக்கி புறப்பட்டார். நேற்று மாலை தல்லாகுளம் பகுதியில் எதிர்சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து இன்று காலை 6 மணி 22 நிமிடங்களில் அலங்கரிக்கப்பட்ட தங்கக் குதிரையில் பச்சைப் பட்டுடுத்தி கம்பீரமாக வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். கோவிந்தா….கோவிந்தா என பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் முழக்கமிட்டனர்.

அப்போது கள்ளழகர் மீது பக்தர்கள் தண்ணீர் பிய்ச்சி அடித்தனர் . பல்லாயிரக்கணக்கானர் கைகளில் தீபம் ஏந்தி வரவேற்றனர்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய இந்த  கண்கொள்ளாக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து தீர்த்த வாரி நடைபெற்றது.

இந்த உன்னதக் காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வைகை ஆற்றங்கரையோரம் நேற்று இரவு முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினார்கள். நள்ளிரவு வரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர். எனவே மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால் வைகை ஆறு வறண்டு கிடக்கிறது. இதனால் அழகர் ஆற்றில் இறங்குவதற்காக லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு சிமெண்டு தளத்தில் நிரப்பப்பட்டுள்ளது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் பாதுகாப்புக்காக அந்த பகுதியை சுற்றிலும் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்  பணியில் ஈடுபட்டுள்ளனர்.

click me!