Avaniyapuram Jallikattu: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! வீரர்கள் உறுதிமொழியுடன் தொடக்கம்!

By SG BalanFirst Published Jan 15, 2023, 7:58 AM IST
Highlights

மதுரையில் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் தமிழரின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.

இன்றைய தினம் அவனியா புரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் விதிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டில் பங்கேற்போம் என வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பின் போட்டி தொடங்கியது.

காலை 8 மணிக்கு துவங்கப்பட்ட இந்தப் போட்டி  மாலை 4 மணி வரை நடைபெறும் களத்தில் மாடுபிடி வீரர்கள் மாட்டை பிடித்துக்கொண்டே 50 மீட்டர் தூரம் செல்ல வேண்டும். மாட்டின் வால், கொம்பு, கால் போன்றவற்றைப் பிடிக்கக் கூடாது.

மாட்டைச் சரியாகப் பிடித்தபடி 50 மீட்டருக்குத் தாக்குப் பிடிப்பவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். யாரும் பிடிக்கமுடியாமல் காளை தப்பி சென்றுவிட்டால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் குத்துவிளக்கு, அண்டா, மிக்சி, குக்கர், பித்தளை பானைகள், தங்க காசு, சைக்கிள், பைக், கார், ரொக்க பணம் போன்ற பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காளைகள் மருத்துவ பரிசோதனைக்காக 50க்கு மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர்கள் முதலுதவி குழுவினர்கள் தயாராக உள்ளனர். மாடுபிடி வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் மருத்துவ குழுவினர்கள் 10 ஆம்புலன்ஸ் வசதிகள் தயாராக உள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பின், நாளை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியும் அதனைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெறும்.

click me!