
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் ஏற்பட்ட மோதலில் மணமகன் மற்றும் மணமகள் வீடுகளை இருதரப்பினரும் மாற்றி மாற்றி தீ வைத்து எரித்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள வெல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன். இவருடைய மகன் செல்வநாதன் (23). இவரும் அதே ஊரை சேர்ந்த பரமசிவம் மகள் பாதம்பிரியாள் (18) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் செல்வநாதனும், பாதம்பிரியாளும் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் இரு குடும்பத்தினரிடையே பெரும் மோதல் வெடித்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி இரவு செல்வநாதன் வீடு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் நேற்று காலை பரமசிவத்தின் வீட்டை செல்வநாதனின் உறவினர்கள் தீ வைத்து எரித்தனராம்.
இந்த தகவல்களை அறிந்த காதல் ஜோடிகள் நேற்று மதியம் மதுக்கூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் செல்வநாதன் மற்றும் பாதம்பிரியாள் ஆகிய இருவரையும் பாப்பாநாடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் ஒரத்தநாடு துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) செங்கமலக்கண்ணன், பாப்பாநாடு காவல் ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.