
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே உள்ள பொன்மனை, இடைக்கட்டான் கரையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுஜித் (20). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலை தேடி வந்தார். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தற்போது கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் குலசேகரம் நோக்கி புறப்பட்டார். மங்கலம் பகுதியில் சென்றபோது, எதிரே குலசேகரத்தில் இருந்து பொன்மனை நோக்கி வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் இரண்டு துண்டாக உடைந்தது. அதில் பயணம் செய்த சுஜித் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து குலசேகரம் காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சுஜித்தின் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக குலசேகரம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரான களியல் பகுதியை சேர்ந்த மோகன்தாசை (40) பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே சுஜித் விபத்தில் இறந்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுஜித்தின் உடலை பார்த்து கதறி அழுதனர்.