கன்னியாகுமரி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டன. ஒரு மணி நேரத்தில் இந்தப் போராட்டம் நிறைவடைந்தது.
உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நேற்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டன.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு, குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ஆஸ்டின், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் நகர தி.மு.க. செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடசேரி அண்ணா சிலை முன்பு இருந்து கேப் ரோடு அண்ணா பஸ்நிலையம் வரையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளை கோர்த்தபடி அணிவகுத்து நின்றனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் 5 மணி வரை நடந்தது.
இதில், தி.மு.க.சார்பில் முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், தாமரைபாரதி, குட்டிராஜன், பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவூது, பெஞ்சமின்,
குழித்துறை நகர தி.மு.க.செயலாளர் பொன் ஆசைதம்பி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகேஷ் லாசர், சிவகுமார், அனிதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி,
இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைபொது செயலாளர் வன்னியரசு, குமரி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், த.மு.மு.க.சார்பில் திருவை செய்யது, திராவிடர் கழகம் சார்பில் வெற்றிவேந்தன் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.