பைக் மீது மோதி தீப்பிடித்து எரிந்த லாரி... கருகிய வாலிபர்...

First Published Oct 28, 2016, 1:50 AM IST
Highlights


பைக் மீது லாரி மோதியதில், அதில் வந்த வாலிபர், பைக்குடன் லாரியில் சிக்கி பலியானார். பெட்ரோல் டேங்க் உடைந்து, தீப்பற்றியதில் அவர் எரிந்து, கரிக்கட்டையானார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் கல்கவாரி உள்ளது. இங்கிருந்து கருங்கற்கள், ஜல்லிகள் ஆகியவை சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு, ஒரு லாரி புறப்பட்டது. வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில், பனப்பாக்கம் பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், சாலையின ஒர பாதையை மறித்துவிட்டு, எதிர் திசையை இருவழிபாதையாக அமைத்துள்ளனர்.

ஜல்லி கற்களை ஏற்றி சென்ற லாரி, அவ்வழியாக வேகமாக சென்றபோது, எதிரே பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், பைக் மற்றும் அதனை ஓட்டி வந்த வாலிபரும் லாரியில் சிக்கினார். லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய வாலிபர், சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பைக்குடன் இழுத்து செல்லப்பட்டார்.

இதில் பைக் பெட்ரோல டேங்க் உடைந்து அதில் இருந்த பெட்ரோல் கீழே ஊற்றியது. மேலும் பைக் இழுத்து செல்லப்பட்டபோது, அதில் வந்த தீப்பொறி அதில் விழுந்து பைக் தீப்பற்றி, லாரியின் முன் பக்கத்தில் தீ மளமளவென பரவியது. இதை பார்த்ததும் டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, தப்பி ஓடிவிட்டார்.

தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, தீயை அணைத்தனர். பின்னர், லாரியில் சிக்கி சடலமாக கிடந்த வாலிபரை மீட்டனர். அதற்குள் அவர் எரிந்து கரிக்கட்டையானார்.

இதையடுத்து ஒரகடம் போலீசார், சடலத்தை கைப்பற்றி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எரிந்து கட்டையானதால், அவர் யார், எந்த ஊர் என அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து, தீவிரமாக விசாரிக்கின்றனர். இதற்கிடையில், தப்பியோடி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

click me!