மதுவிலக்கு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது! இனி சிக்கினா சின்னாபின்னம்தான்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By SG BalanFirst Published Jul 13, 2024, 9:43 PM IST
Highlights

மதுவிலக்கு திருத்த மசோதா 2024 சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட புதிய மதுவிலக்கு திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றன.

Latest Videos

இதன் எதிரொலியாக தமிழக அரசு ஏற்கெனவே இருக்கும் தமிழக மதுவிலக்குச் சட்டத்த்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதாவை தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்தச் சட்ட மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துவிட்டார். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுவிலக்கு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதில், மதுவிலக்கு திருத்த மசோதா 2024 சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த புதிய சட்டத் திருத்தம் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கும் விற்பனை செய்வோருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சவும் விற்கவும் பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். குறிப்பாக, கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை ஜாமினில் வெளியே வர முடியாதபடி கைது செய்யலாம்.

click me!