சீன இன்சினை பயன்படுத்தி மீன்பிடிக்கும் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்களுக்கு சொந்தமான இன்சின்களை அகற்ற வேண்டும் என கோரி காசிமேட்டில் மீனவர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் மாநகராட்சி பேருந்துகளின் மீது கல் வீசியதில் கண்ணாடிகள் உடைந்தன.
திருவொற்றியூர் அருகே காசிமேடு கிராமத்தில் ஏராளமான மீனவ கிராம மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் அதிவேக மோட்டாரான சீன இன்சினை பயன்படித்தி மீன்கள் பிடிப்பதாகவும் இதனால் தங்களது வாழிவாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதைகண்டித்து அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் தடியடி நடத்தினர். இதில் பொதுமக்கள் காயமடைந்தனர். மேலும் ஒருவர் மயக்கமடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மறுபகுதி மக்கள் அங்கு நின்று கொண்டிருந்த மாநகராட்சி பேருந்துகளின் மீது கற்களை வீசினர். இதில் பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது.