நீதிபதிகள் மீது ஊழல் குற்றசாட்டு சுமத்தியது தொடர்பான வழக்கில் உச்சநிதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்திற்கு ஆளான நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவுப்படி மன நல பரிசோதனைக்கு மறுத்துவிட்டதோடு அதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து நீதிபதி கர்ணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், அவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில் நீதிபதிகர்ணன் கொல்கத்தாவில் இருந்து நேற்று சென்னைக்கு வந்தார்.
சென்னை விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த நீதிபதி கர்ணன், பின்னர் ஆந்திர மாநிலம் காளஹகஸ்தி கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கர்ணனை கைது செய்ய 4 காவல்துறை அதிகாரிகள் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்துள்ளனர். அவர்கள் காவல் துறை ஆணையரை சந்தித்து கர்ணனை கைது செய்ய உதவி கோரினர்.
இதனை தொடர்ந்து டி.ஜி.பி. சுரவித்கார் புர்க யஷா, கூடுதல் டி.ஜி.பி. ரன்பீர் குமார், துணை கமிஷனர் சுதாகர், உதவி ஆணையாளர் ஏ.கே.தாஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கரன்சின்கா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து கொல்கத்தா போலீசுக்கு உதவியாக தமிழக போலீசை காவல் அணையர் அனுப்பி வைத்தார். ஆனால் கர்ணன், கோவில் வழிபாட்டிற்காக காளஹஸ்தி சென்றுள்ளதால் கொல்கத்தா மற்றும் தமிழக போலீசார் காளகஸ்தி சென்றனர்.
அப்போது கர்ணனை பிடிப்பதற்காக காளஹஸ்திக்கு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி கொல்கத்தா துணை கமிஷனர், உதவி கமிஷனர் தமிழக போலீஸ் படையுடன் நேற்று பிற்பகலில் ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றனர். கொல்கத்தா போலீசார் நடத்தி வரும் அதிரடி வேட்டைக்கு உறுதுணையாக இருப்பதற்காக தமிழக போலீசிலும் தனிப்படை அமைக்கப்பட்டது.
காளஹஸ்தி செல்லும் வழியில் தடா அருகே நேற்று இரவு போலீசார் முகாமிட்டனர். கொல்கத்தா மற்றும் தமிழக போலீசுடன் ஆந்திர மாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவரை நெருங்குவதற்கு முன்பு அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் ஏமாற்றமடைந்த கொல்கத்தா போலீசார் மீண்டும் சென்னை திரும்பினர்.
இந்நிலையில், இன்று வெளியான தகவலின் படி நேபாளத்திற்கு தப்பித்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.