கள்ளக்குறிச்சி வன்முறை.. போலி தகவலை பரப்பியவருக்கு ஆப்பு.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..!

By vinoth kumarFirst Published Jul 26, 2022, 11:40 AM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரம் தொடர்பாக டுவிட்டர் சமூகவலைதளங்களில் வதந்திகளை பரப்பியவர்கள் விவரங்களை கேட்டு அந்நிறுவனத்திற்கு காவலர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 4 நாட்கள் அமைதியாக நடந்து வந்த போராட்டம் 5வது நாளான 17ம் தேதி வன்முறை வெடித்தது.

அப்போது, காவல்துறை வாகனம், பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதற்கிடையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை 307 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கலவரம் நடந்த அன்று எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளின் அடிப்படையில் பலரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில், சம்பவம் நடந்த அன்று எந்தெந்த கணக்குகளில் இருந்து வதந்தி, போலி தகவல்கள் பரப்பப்பட்டது. இத்தகைய பதிவுகளை பரப்ப உபயோகிக்கப்பட்ட கணக்குகள் குறித்த விவரங்களை தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

click me!