கடலூர்
கடலூர் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் தொடங்கவுள்ள மீன் பிடி தடை காலத்தில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று ஆட்சியர் தண்டபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர் ஆட்சியர் தண்டபாணி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகில் உள்ள பகுதி முழுவதும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலம் மீன் பிடிப்பதை தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த 16 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தடை ஆணையின்படி இந்த ஆண்டும் விசை மற்றும் இழுவலைப் படகுகள் மூலம் மேற்கண்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட 61 நாள்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இந்த தடை காலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் தொடங்கி வருகிற ஜூன் 14-ஆம் தேதி வரை நடக்கிறது. எனவே, கடலூர் மாவட்ட மீனவர்கள் இந்த மீன்பிடி தடை காலத்தில் இயந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளை தவிர வேறு எந்த வகையான மீன்பிடி படகுகளைக் கொண்டும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான இந்த 61 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால், கடலூர் மாவட்ட மீனவர்கள் இந்த தடை காலத்தில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.