தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதேவேளையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணி பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜியை நியமிப்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்றம் கொலிஜியம், இந்திரா பானர்ஜியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. இந்திரா பானர்ஜியுடன் மேலும் இரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவ், இந்திரா பானர்ஜிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை நீதிபதியாகிறார் தஹில்ரமணி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணி பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். 2001 முதல் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக தஹில்ரமணி உள்ளார். இவர் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதில் தனிச்சிறப்பு மிக்கவர். மேலும் 59 வயதாகும் இவர் 1982ல் பார் கவுன்சிலில் தன்னுடைய பெயரை பதிவு செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.