
கஜா புயலின் தாக்கம் அடுத்த 6 மணி நேரத்தில் குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிக பட்சமாக அதிராமபட்டினத்தில் 111 மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. கஜா புயலின் முழுப்பகுதி நிலப்பரப்பிற்கு வர இன்னும் 2 மணி நேரம் ஆகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
கஜா புயலின் கண்பகுதி கரையை கடந்தவுடன் எதிர் திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது கஜா புயல் முழுமையாக கரையை கடந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலின் கண்பகுதி 26 கிமீ விட்டம் கொண்டது. மேலும் புயல் நகரும் திசையில் காற்றின் வேக மாறுபாட்டால் கஜா கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய கஜா புயல் காலை 5.30 மணி அளவில்தான் கரையை கடந்துள்ளது. கஜா புயல் கரையை கடக்க தொடங்கியதால் நாகை, வேதாரண்யத்தில் 100 கிமீ வேகத்தில் காற்றி வீசி வருகிறது. இதன் காரணமாக நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசியதால் பல வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளன. நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசி வருவதால் ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன.
நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மீட்பு பணியினர் இரவோடு இரவாக பல இடங்களில் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வரை சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.