கனரா வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்; ரூ.1 கோடி மோசடி செய்த இருவருக்கு வலைவீச்சு... 

First Published May 10, 2018, 11:21 AM IST
Highlights
jewelery fraud in Canara Bank worth Rs 1 crore two searching by police


தேனி

தேனி கனரா வங்கியில் ரூ.1 கோடி மதிப்பிலான அடகு வைத்த நகைகள் மாயமானதில் நகை மதிப்பீட்டாளர் உள்பட இருவரை பிடிக்க காவலாளர்கள் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

தேனி நகர் மதுரை சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் மக்கள் அடகு வைத்த நகைகள் மாயமானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு அடகு வைத்த பலரின் நகைகள் மாயமானதுடன், போலி நகைகளும் அடகு வைத்து மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. 

இந்த மோசடியில் ஈடுபட்டதாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் செந்தில், அவருடைய உதவியாளர் வினோத் ஆகிய இருவர் மீதும் வங்கி முதன்மை மேலாளர் சுப்பையா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் செந்தில், வினோத் ஆகிய இருவர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். நகை அடகு வைத்ததில் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. 

வழக்குப்பதிவு செய்து ஒரு வார காலம் ஆகியும் இன்னும் மோசடி செய்த இருவரும் கைது செய்யப்படவில்லை. தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க முடியாமல் காவலாளர்கள் திணறி வருகின்றனர்.

செந்தில் மற்றும் வினோத் இருவரும் பிடிபட்டால்தான் வங்கியில் இருந்து மாயமான நகைகள் என்ன ஆனது? என்பது தெரிய வரும். அதேநேரத்தில் அவர்கள் இருவரும் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், நகைகள் என்ன ஆனது? என தெரியாமல் அடகு வைத்த மக்கள் தொடர்ந்து வங்கிக்கு வந்து கேள்வி கேட்டு வருகின்றனர். 

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவலாளர்கள், "செந்தில், வினோத் ஆகிய இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை காவலாளர்கள் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களை பிடிக்க முடியவில்லை. 

அவர்கள் எங்கு தலைமறைவாக உள்ளார்கள் என்பதை தேடி வருகிறோம். அவர்கள் கைது செய்யப்பட்டால்தான், மாயமான நகைகளை மீட்க முடியும். மேலும், இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பதும் தெரியவரும்" என்று தெரிவித்தனர்.
 

click me!