Jawad cyclone : உருவானது ”ஜாவத் புயல்”- 65 விரைவு ரயில்கள் ரத்து

By Thanalakshmi VFirst Published Dec 3, 2021, 4:54 PM IST
Highlights

வங்கக் கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிகை நடவடிக்கையாக விசாகபட்டினம் வழியாக செல்லும் 65 இரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி இன்று, புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 100கி.மீ முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிய நிலையில், இது நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் புயலாக மாறும் எனவும் கூறப்பட்டது. அதன்படி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று அதிகாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது தற்போது மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது.

மேலும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிவந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. இது மேலும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து  நாளை காலை வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிசா கடற்கரையை அடையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் புயலின் காரணமாக இன்று வடக்கு கடலோர ஆந்திரம், தெற்கு கடலோர ஒடிசா ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , விசாகபட்டினம் வழியாக செல்லும் 65 ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை வழங்கபட்டுள்ளது. 

இன்று மற்றும் நாளை ஆந்திர மாநிலத்திற்கு தேசிய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் பிறப்பித்திருக்கிறது. சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விட வைக்கும் அளவுக்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் 7 மாவட்டங்களுக்கு, நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புயலின் தாக்கம் கஞ்சம், பூரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அங்கு மிக அதிக அளவிற்கு மழை பெய்யக்கூடும் கூறப்பட்டுள்ளது. 

வங்ககடலில் நிலக்கொண்ட காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக மாறியதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வுமையம், தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

click me!