
ஜல்லிக்கட்டு பிரச்சனை தீர மத்திய மாநில அரசுகள் சிற்ப்பு சட்டம் கொண்டுவரவேண்டுமென்று பொதுநல வழக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது நாளை விசாரணைக்கு வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதை அடுத்து மத்திய அரசும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தடை விதித்தது. இரண்டு ஆண்டுகள் போராட்டம், வழக்கு , கோரிக்கை என சகலவிதத்திலும் முயற்சிகள் நடந்தும் பலனில்லை.
இந்த ஆண்டும் வழக்கம் போல் அரசியல் வாதிகள் சடங்கு பூர்வ போராட்டங்களை நடத்தினார்கள், நீதிமன்றம் தீர்ப்பு தரவில்லை. இதன் விளைவு லட்சக்கணக்கான இளைஞர்கள் நேரடியாக யாருடைய தூண்டுதல் இன்றி போராட்டத்தில் குதித்தார்கள்.
வன்முறை இல்லை , கலவரம் இல்லை. அனைவரும் ஒரு இடத்தில் நாள்கணக்கில் கூடி போராட்டம் நடத்துகிறார்கள். இது மிகப்பெரிய வீச்சை தமிழகம் முழுதும் மட்டுமல்ல இந்தியவையும் பார்க்கவைத்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று தப்பித்து வந்த மத்திய மாநில அரசுகள் தற்போது அவசர சட்டம் இயற்ற வேண்டிய கட்டாயாத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் , இனி நீதிமன்றம் கூட இதில் தலையிடா வண்ணம் மத்திய மாநில அரசுகள் சிறப்பு சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்று மதுரையை சேர்ந்த பொதுநலவழக்குகள் மைய நிர்வாகி கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததால் இரண்டு ஆண்டுகளாக காளைகள் அடிமாடுகளாக அழிக்கப்படுகிறது.பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு தடை விதிப்பு காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே வருங்காலத்தில் இந்த நிலை வராமலிருக்க ஜல்லிக்கட்டு இடையூறு இன்றி நடக்க மத்திய மாநில அரசுகள் நீதிமன்றம் தலையிடாத வண்ணம் சிறப்பு சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் ,என்று கோரியுள்ளார்.
வழக்கை ஏற்று கொண்ட உயர்நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுக்க உள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.