தமிழகத்தை சென்ற வாரம் கலக்கிய வருமான வரி சோதனையில் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லை. ஆடிட்டர் ஒருவர் வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக ஆசிரியை ஒருவர் வீட்டில் சோதனை நடத்தினர் வருமான வரித்துறையினர். உண்மை தெரிந்து அசடு வழிந்து பின்னர் மன்னிப்பு கேட்டு சென்றனராம்.
சசிகலா உறவினர்களின் இல்லம் மற்றும் நிறுவனங்களைக் குறி வைத்து, தமிழகத்தில் பரவலாக வருமான வரித் துறையினர் கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, அதிமுக.,வின் ஊடகங்களான ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆகியவற்றிலும், ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நிர்வகித்து வரும் விவேக் ஜெயராமனின் வீடு மற்றும் அலுவகங்களிலும், தினகரன், திவாகரன் மற்றும் உறவினர்கள் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள் என 187 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை பரபரப்பாக நடைபெற்றது.
இந்த வருமான வரி சோதனைகளின் போது, சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்துக்கு ஜோதிடம் பார்த்து வந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகர் வீட்டிலும், டாக்டர் வீட்டிலும் என நடந்த போது, குடும்ப ஆடிட்டர் ஒருவர் வீட்டிலும் கணக்காக அதிகாரிகள் இறங்கினர். ஆனால் அவர்கள் செல்ல வேண்டியது, கடலூரில் உள்ள அந்த ஆடிட்டர் வீட்டுக்குத்தான். ஆனால் அவர்கள் சென்று இறங்கியதோ ஓர் ஆசிரியை வீட்டில். இப்படி ஆடிட்டர் வீட்டில் சோதனை மேற்கொள்வதற்கு பதிலாக ஆசிரியை ஒருவர் வீட்டில் சம்பந்தமே இல்லாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினராம். இதனால் அந்த அவர் ஆடிப்போனார்.
ஆசிரியை வீட்டில் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை வங்கி வங்கியாக அழைத்துச் சென்று விசாரித்து உள்ளனராம். பின்னர் மாலை சென்னையில் இருந்து வந்த தகவலை அடுத்து, தாங்கள் வீடு மாறி வந்ததாக அசடு வழிந்துள்ளனராம்... அவரிடம் மன்னிப்பு கேட்டு பின்னர் சென்றுவிட்டனர் என்று சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.