
மேல்மலையனூர்,
மேல்மலையனூரில் மனைவியை சேர்த்து வைக்க மறுத்த மூதாட்டியை இரும்பு குழாயால் அடித்துக் கொலை செய்தவிட்டு தப்பியோடிய கொத்தனாரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேல்மலையனூர் அருகே மாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு. இவருடைய மனைவி ருக்கம்மாள் (75). இவருக்கு தமிழரசி, கலையரசி ஆகிய 2 மகள்களும், செல்வராஜ் என்கிற ஒரு மகனும் இருக்கின்றனர்.
இரண்டாவது மகள் கலையரசி திருவண்ணாமலை மாவட்டம் சேர்க்கவாய்ச்சான் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். சங்கர் கலையரசி தம்பதியின் மகள் பூங்கொடியை (25) அதேபகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் கொத்தனாரான நாராயணன் (28) என்பவருக்கு கடந்த 2013–ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனர். நாராயணன் – பூங்கொடி தம்பதிக்கு திலகவதி (2) என்கிற ஒரு பெண் குழந்தை உள்ளது. பூங்கொடியின் சகோதரர்கள் அருண்குமார் (16), அஜித்குமார் (13) ஆகிய இரண்டு பேரும் பாட்டி ருக்கம்மாள் வீட்டில் தங்கி அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
பூங்கொடிக்கும், நாராயணனுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பூங்கொடி கணவரிடம் கோபப்பட்டு தனது குழந்தையுடன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மாந்தாங்கலில் உள்ள பாட்டி ருக்கம்மாள் வீட்டுக்கு வந்து விட்டார்.
இதையடுத்து நாராயணன் மாந்தாங்கலுக்கு வந்து, பூங்கொடியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கூறியுள்ளார். அதற்கு பூங்கொடி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதையடுத்து நாராயணன், ருக்கம்மாளிடம் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மாந்தாங்கல் கிராமத்துக்கு வந்த நாராயணன் வீட்டு முன்பு தூங்கிக் கொண்டிருந்த ருக்கம்மாளை எழுப்பி, பூங்கொடியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். அதற்கு ருக்கம்மாள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நாராயணன் வீட்டின் வெளிப்புற கதவை பூட்டிவிட்டு, அருகில் கிடந்த இரும்பு குழாயால் ருக்கம்மாள் முகத்தில் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ருக்கம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டுக்குள் இருந்த அருண்குமாரும், அஜித்குமாரும் பாட்டி ருக்கம்மாளை காப்பாற்றக்கோரி அலறினர். இவர்களது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர். இதைபார்த்த நாராயணன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த வளத்தி காவல் இன்ஸ்பெக்டர் பழனி, சப்–இன்ஸ்பெக்டர்கள் விசுவநாதன், சங்கரன் ஆகியோர் தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அடித்துக் கொலை செய்யப்பட்ட ருக்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நாராயணனை தீவிரமாக தேடிவருகின்றனர்.