ஜனவரி 1-ந்தேதி முதல் கர்நாடக மாநிலத்தின் அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் ‘இந்திரா கேண்டீன்’ அமைக்கப்படும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் ‘இந்திரா கேண்டீன்’ திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி முதல்வர் சித்தராமையை தொடங்கினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இந்திரா கேண்டீனை பெங்களூரு நகரில் தொடங்கி வைத்தார். இப்போது பெங்களூரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் இந்திரா கேண்டீனைதொடங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு பின் சட்டத்துறை அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா கூறியதாவது-
ஜனவரி 1-ந்தேதி முதல் மாநிலத்தில் 171 மையங்களில் 246 இந்திரா கேண்டீன்கள்அமைக்கப்படும். மாவட்ட, தாலூகா தலைநகரங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பெங்களூரு மாநகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளில் மட்டும் இந்திரா கேண்டீன்செயல்பட்டு வருகிறது. இங்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு மலிவு விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்ட , தாலுகா தலைநகரங்களில் இந்திரா கேண்டீன் அமைக்கத் தேவையான இடங்கள் நவம்பர் மாதத்துக்குள் தேர்வு செய்யப்படும். கட்டுமான பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிந்து ஜனவரி 1-ந்தேதி கேண்டீன் திறக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.185 கோடி செலவாகும். மலிவு விலையில் உணவுகளை வழங்குவதால், மாதத்துக்கு ரூ.9 கோடி மானியமாகத் தரப்படுகிறது. இந்த கேண்டீன் பஸ் நிலையம், அரசு மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகே அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.