திருவண்ணாமலை பவழக்குன்று மலைக்கு நித்தியானந்தாவின் சீடர்கள் மீண்டும் இன்று பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்த இடமென்று கூறப்படும் பவழக்குன்று மலை புனிதமான இடங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த பவழக்குன்றில் நித்யானந்தா அமர்ந்திருந்தபோது, ஞானமடைந்ததாகவும், இதற்காக அந்த பவழக்குன்றை ஆக்கிரமிக்கும் முயற்சியில் நித்தியானந்தாவின் சீடர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
இதற்கு, அப்பகுதி மக்களும், சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டும் உள்ளது.
அப்போது, கோட்டாட்சியர் உமா மகேஷ்வரியை, நித்தியானந்தாவின் சீடர்கள் ஒருமையில் பேசியும், சாபமும் விட்டுள்ளனர். இதையடுத்து, நித்தியானந்தாவின் சீடர்களை போலீசார் விரட்டினர்.
அதேபோல், சென்னை திரிசூலத்தில் உள்ள அம்மன் கோயில் நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் நித்தியானந்தா சீடர்கள் ஈடுபட்டனர். இதனை அப்பகுதி மக்கள் எதிர்த்ததுடன், அவர்களை விரட்டி அடித்தனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை பவழக்குன்று மலையில் இன்று நித்தியானந்தாவின் சீடர்கள், மீண்டும் அப்பகுதியை ஆக்கிரமித்து ஆறு கால பூஜையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பூஜைகள் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதாக நித்தியானந்தாவின் சீடர்கள் தெரிவித்தனர்.