
மாணவர்களுக்கு டி.சி. க்கு பதில் ஸ்மார்ட் கார்டு….நவீன மயமாகும் தமிழக பள்ளிக் கல்வித்துறை…
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றம், பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்கள் அறிவிப்பு ரத்து, கிரேடு முறை அறிமுகம் போன்ற பல்வேறு புதிய அறிவிப்புகள் அண்மைக்காலமாக வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த வெள்ளாள பாளையத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாமைத் தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பள்ளி மாணவர்களின் முழு விவரங்களை கம்ப்யூட்டரில் ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளதாகவும், ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்களின் திறமைகள், தேர்வு மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை அறியலாம் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்..
பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை, கல்விச்சூழல், ஆசியரியர்கள் விவரம் போன்றவையும் இந்த ஸமார்ட் கார்டு மூலம் அரசு எளிதாக அறிய முடியும் என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன்.. ஸ்மார்ட் கார்டுகள் வந்துவிட்டால் மாற்றுச் சான்றிதழ்களுக்கான தேவைகள் இருக்காது. ஒருங்கிணைக்கப்படும் தகவல்கள் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு தீர்வு காண வழிவகை ஏற்படும். என்றும் தெரிவித்தார்.