Asani: இன்று உருவாகிறது அசானி புயல்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

By Raghupati RFirst Published May 8, 2022, 8:08 AM IST
Highlights

Asani Cyclone : வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நேற்று முன்தினம் காலை தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.இதனையடுத்து,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் பின்னர் மே 8 ஆம் தேதி புயலாக வலுபெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அவ்வாறு உருவானால் இந்த புயலுக்கு ‘அசானி புயல்’ என்று வானிலை ஆய்வாளர்கள் பெயரிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது. இந்நிலையில்,ஆழ்ந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் வங்கக்கடலில் இன்று புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் தொடர்ந்து நகர்ந்து,மே 10 ஆம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக,ஆந்திரா, ஒடிசா,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம்,தமிழகத்தில் நாளை (மே 9 ஆம் தேதி) 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை,  கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக, அந்தமான், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை முதல் இரண்டு நாட்களும் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு மேற்கண்ட தேதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்’ என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : திமுகவின் முக்கிய விக்கெட்..தட்டி தூக்கிய அண்ணாமலை.! பாஜகவுக்கு தாவும் எம்.பி திருச்சி சிவா மகன்

இதையும் படிங்க : நான் ஜெயலலிதாவின் போன்று ஆட்சியை தருவேன்.. இபிஎஸ் - ஓபிஎஸ்-க்கு திகில் காட்டும் சசிகலா !

click me!