அரசு மருத்துவமனைகளில் சரியாக சிகிச்சை தராவிட்டால் உடனே தெரிவிக்கவும் – நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் ஆட்சியர்…

First Published Oct 20, 2017, 8:33 AM IST
Highlights
If you do not get proper treatment in government hospitals immediately wait - the waiter waiting for action ...


திருவள்ளூர்

போலி மருத்துவர்கள் பற்றியோ மற்றும் அரசு மருத்துவமனைகளில் சரிவர சிகிச்சை தரவில்லை என்பது பற்றியோ தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், ஊத்துக்கோட்டை நகர எல்லையில் பாயும் ஆரணி ஆற்றை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி பார்வையிட்டார்.

பின்னர், நகர மையப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குச் சென்று குப்பைகளை ஊழியர்கள் தினந்தோறும் அகற்றுகிறார்களா? சுத்தமான குடிநீர் குழாய்களில் தினமும் விநியோகிக்கப்படுகிறதா? என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.

பின்னர், அரசு ஆண்கள் பள்ளியில் உள்ள கழிவறைக்குச் சென்று பார்வையிட்டு அவற்றை சுத்தமாக வைத்து கொள்ள அறிவுரயும் வழங்கினார்.

அதன்பின்னர் சுருட்டப்பள்ளியில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை பார்வையிட்டார். அதன் பிறகு சத்தியவேடு சாலையில் உள்ள ஆரணி ஆற்று பாசன கால்வாயை பார்வையிட்டார். அங்கு கோழி இறைச்சிகளின் கழிவுகள் போடப்பட்டிருந்ததை பார்த்து அங்குள்ள கோழி இறைச்சி கடை உரிமையாளர்களைச் சந்தித்து “இறைச்சிகளை கண்ட இடத்தில் போட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

பின்னர், ஊத்துக்கோட்டை ஏரியை பார்வையிட்ட ஆட்சியர் ஏரியில் அனுமதியின்றி போடப்பட்டிருந்த மீன் வளர்ப்பு வலைகளை அகற்றுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பின்னர், செய்தியாளர்களிடம், “டெங்கு கொசுக்களை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக டெங்கு இறப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றன. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 19 பேர், கும்மிடிபூண்டி அரசு மருத்துவமனையில் 4 பேர் என்று மொத்தம் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 225 பேர் சாதாரண காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளன.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். மருந்து கடைகளில் மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டாம். மருத்துவர்களின் சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை வழங்கும் மருந்து கடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போலி மருத்துவர்கள் குறித்தோ, அரசு மருத்துவமனைகளில் சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்றாலோ 1077 என்ற எண்ணில் இலவசமாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா, துணை தாசில்தார் கதிர்வேலு, வருவாய் அலுவலர் ராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ், பொதுப்பணித்தறை இளநிலை பொறியாளர் புருத்வி பாலசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

click me!