திருச்சி
உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை ஒரு மாதத்திற்குள் தடுக்காவிட்டால் மாநகராட்சியை எதிர்த்து பொதுநல வழக்கு தொடருவோம் என்று தண்ணீர் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தண்ணீர் அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. இந்த அமைப்பின் தலைவர் எம்.சேகரன் இதற்கு தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் கி.சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், "உய்யக்கொண்டான் வாய்க்காலில் பல கட்டங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியர், உய்யக்கொண்டான் பாதுகாப்புக் குழு கூட்டத்தை கூட்டியோ அல்லது சம்பந்தப்பட்ட துறைகளிடம் பேசியோ தீர்வு காணவேண்டும்.
இந்த கோரிக்கை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் மாநகராட்சியை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர்வது,
காவிரி ஆற்றுக்கரையில் கட்டப்படும் கட்டடங்களுக்காக அங்குள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. இவைகளை தடுக்க பொதுப்பணி துறை, மாநகர திட்ட குழுமம், வருவாய் துறை, மாநகராட்சி ஆகியவை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் இவ்வமைப்பின் செயலர் கே. சி. நீலமேகம் வரவேற்றார். கூட்டத்தின் இறுதியில் இணைச் செயலாளர் தாமஸ் நன்றி தெரிவித்தார்.