தஞ்சாவூர்
கீழவாசல் பகுதியில் உள்ள சாராயக் கடையை அகற்றாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் சாராயக் கடை இருந்த கட்டடத்தின் மாடியில் ஏறிநின்று தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் நிறுவனர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
தஞ்சாவூரில் டாஸ்மாக் சாராயக் கடையை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட முயன்ற தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த பத்து பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல் பகுதியில் காமராஜர் சிலை அருகே டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று உள்ளது. அதனை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் கருப்புக் கொடியுடன் அந்தச் சாராயக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து அந்த டாஸ்மாக் சாராயக் கடை முன்பு நேற்று முதல் காவலாளர்கள் பாதுகாப்பிற்காக அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பின்னர், சாராயக் கடை திறக்கும் நேரத்தில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் நிறுவனர் ரவிச்சந்திரன் டாஸ்மாக் சாராயக் கடை இருந்த கட்டடத்தின் மாடியில் ஏறி தற்கொலை செய்யப் போவதாகக் கூறி மிரட்டல் விடுத்தார். அப்போது, காவலாளர்கள் அந்த மாடிக்குச் சென்று ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
இதேபோல, போராட்டம் நடத்துவதற்காகக் கருப்புக் கொடியுடன் வந்த மாநிலத் தலைவர் முத்துமோகன்ராஜ், பொதுச் செயலர் பொய்யாமணி, பொருளாளர் நீலகண்டன், மாவட்டத் தலைவர் சிவா, செயலர் பாஸ்கர் உள்ளிட்ட பத்து பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.