விருதுநகர்
விருதுநகரில், முறைகேடாக நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் சத்திரம் புளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, அல்லாளப்பேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் தலைமையில் 14 பேரும், சத்திரம் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 11 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2- ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இந்த பரிசீலனையில் எந்த முடிவும் அறிவிக்காமல் தேர்தல் அலுவலர் சென்றுவிட்டார்.
அதன்பின்னர் மறுநாள் (3-ஆம் தேதி) எந்த முடிவு என்றாலும் அருப்புக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகம் வாருங்கள் என்று சொல்லி அலுவலகத்தை அடைத்துவிட்டு சென்றுவிட்டார்.
தற்போது 11 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளதாக தகவல் வந்தது. அதனையடுத்து ஆத்திரமடைந்த அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி கிராமமக்கள் ஒன்று சேர்ந்து அல்லாளப்பேரி மாணிக்க வாசகர் கோவில் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
முறைகேடாக நடைபெற்ற சத்திரபுளியங்குளம் கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.