
விழுப்புரம்
அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த ரேசன் கடை ஊழியர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ரேசன் கடை ஊழியர்கள் சங்க மண்டல மாநாடு விழுப்புரத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாநாட்டுக்கு தொ.மு.ச. மாநில தலைவர் பிச்சாண்டி தலைமை தாங்கினார்.
மாநில இணை செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், பொருளாளர் வெங்கடா சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயபாலன் வரவேற்றார்.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, ராதாமணி, மாசிலாமணி, உதயசூரியன், தொ.மு.ச. பேரவை செயலாளர் பொன்னுராம், துணைத்தலைவர் ராசவேல் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்த மாநாட்டில், "ரேசன் கடை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்,
பொது விநியோக திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்,
ரேசன் கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்,
அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் சலுகைகள் ரேசன் கடை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில், சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தொ.மு.ச. மாநில பொருளாளர் சந்திரன், பொதுச்செயலாளர் சேகர், மாவட்ட கவுன்சில் செயலாளர் ஞானப்பிரகாசம், மாநில பொதுச்செயலாளர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டின் முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கட்ராயலு நன்றித் தெரிவித்தார்.