குடிமராத்து செய்ய இதுவரை எவ்வளவு செலவாச்சு? மீதியிருக்கும் நிதி எவ்வளவு? வெள்ளை அறிக்கை கேட்ட நாகை விவசாயிகள்...

First Published Aug 1, 2018, 9:28 AM IST
Highlights
How much spend for maintenance? and left amount farmers asking White Report


நாகப்பட்டினம்

குடிமராத்து திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை  நடைப்பெற்ற பணிகள் குறித்தும், செலவான நிதியின் விவரம் மற்றும் மீதியிருக்கும் நிதியின் விவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஆட்சியரை, விவசாயிகள் வலியுறுத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதற்கு ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் நாகப்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் அளித்தனர்.

இந்தல் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் இந்தாண்டு தமிழக அரசு ரூ.115 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் நிலம் இல்லாதவர்கள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, அதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதாரண்யம் ஒன்றியம், ஆயக்காரன்புலம் - 3, கைக்காட்டி பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால் மானங்கொண்டான் ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆதனூர், அண்டார்காடு, கோயில் தாழ்வு, கடினல்வயல் போன்ற கிராமங்களுக்கு தண்ணீர் வரவில்லை. எனவே, மானங்கொண்டான் ஆற்றில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்தவித பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் மானியங்கள் வழங்கப்பட வேண்டும்.

பழைய விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதிதாக விவசாய கடன்கள் வழங்கப்பட வேண்டும்;

தரமான விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகப்பட்டினம் - சங்கமங்கலம் இடையே இருக்கும் சாலையில் இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

தமிழகத்திற்கு குடிமராத்து பணிக்காக ரூ.328 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. எனவே, குடிமராத்து திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை  மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், செலவான நிதியின் விவரம் குறித்தும், மீதியிருக்கும் நிதி குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

click me!