
கிருஷ்ணகிரி
ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி அணையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆடி மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூசைகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அதிலும், ஆடிப் பெருக்கன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூசைகள் நடைபெறும். மேலும் அன்று நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுவர். புதுமண தம்பதிகள் ஒன்று கூடி தாலி மாற்றி சாமியை வழிபடுவர்.
இந்தாண்டு நாளை ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவதையொட்டி கிருஷ்ணகிரி அணைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் கிருஷ்ணகிரி அணையில் பொதுப்பணித்துறை, காவல்துறை சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அணைக்கு வரக்கூடிய மக்கள் வாகனங்களை நிறுத்தவும், அந்தப் பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதைத் தவிர அணையில் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட மாரியம்மன் கோவில்களில் பூசைகள் நடக்கின்றன.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி அணையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, துணை காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார், ஆய்வாளர்கள் அன்புமணி (கிருஷ்ணகிரி தாலுகா), ஞானசேகரன் (மகராஜகடை) ஆகியோர் உடனிருந்தனர்.